×

அம்மன் கோயிலில் சூறாவளி காற்றில் சாய்ந்த 150 ஆண்டுகால வேப்பமரம் அதே இடத்தில் நடப்பட்டது: பக்தர்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

திருவள்ளூர், மே 18: நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்றில், திருவள்ளூர் கோலம் கொண்ட அம்மன் கோயிலில் பக்தர்கள் வழிபட்டு வந்த 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் பக்தர்கள் மனவேதனை அடைந்தனர். மேலும் அதே இடத்தில் மரத்தை நட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அந்த மரம் மீண்டும் அதே இடத்தில் நடப்பட்டது. திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் முகமது அலி தெருவில் அமைந்துள்ளது கோலம் கொண்ட அம்மன் திருக்கோயில். இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இந்த கோயில், 150 ஆண்டு கால பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஜாத்திரை திருவிழா நடைபெறும். திருவள்ளூர் நகர மக்கள் அனைவரும் இந்த கோலம் கொண்ட அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்த கோவில் வாசலில் 150 ஆண்டு கால வேப்பமரம் ஒன்றும் இருந்தது.

இந்த வேப்ப மரத்திற்கும் பக்தர்கள் மஞ்சள் குங்குமம் இட்டு தெய்வத்தை போல் வணங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூரில் பெய்த சூறாவளி காற்றில் இந்த வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு மீண்டும் அதே இடத்தில் மரம் நட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த வேண்டுகோளை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி உத்தரவின் பேரில் கோயில் தக்கார் பிரகாஷ், மின்சாரத் துறை உதவி பொறியாளர் தட்சிணா மூர்த்தி, போர்மேன் பரந்தாமன், மின்பாதை ஆய்வாளர் மணி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் வனத்துறை அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் இந்த மரம் நடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வேரோடு சாய்ந்த வேப்ப மரத்தை மீண்டும் அதே இடத்தில் நடுவதற்காக அந்த இடத்தில் 5 அடி ஆழத்திற்கு வேர்கள் ஊடுருவும் பகுதி வரை ஆழமாக பள்ளம் தோண்டி மரத்தை நிற்க வைத்தனர். மரம் மின்கம்பத்தின் மீது படாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்வாரிய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனிடையே வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் காப்பர் ஆக்சி குளோரைடு 50 சதவிகித சத்து பவுடர் அரை கிலோவில் வேரின் அடிபாகம் நன்கு நனையும்படி மெழுகு பதத்தில் பூசிய பின்பு நடவு செய்ய பரிந்துரை செய்தார். மேலும், மரத்தின் வளர்ச்சிக்கு ஹியூமிக் ஆசிட் 1 கிலோவும், கூடுதல் வளர்ச்சிக்கு வேப்ப புண்ணாக்கு 5 கிலோவும் அந்த பள்ளத்தில் இட்டு நடவு செய்ய பரிந்துரை செய்ததன் பேரில் மரத்தை நடவு செய்தனர்.

4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மரம் கீழே விழாமல் இருக்க 2 கிரேன் இயந்திரங்கள் மற்றும் பள்ளம் தோண்ட 1 பொக்லைன் இயந்திரம் மற்றும் 1 கிரேன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு மரத்தை நடவு செய்தனர்.
பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று மீண்டும் அந்த வேப்ப மரத்தை நட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த வெப்ப மரத்திற்கு பக்தர்கள் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து வழிபட்டு சென்றனர். இந்த வேப்ப மரத்திற்கும் பக்தர்கள் மஞ்சள் குங்குமம் இட்டு தெய்வத்தை போல் வணங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூரில் பெய்த சூறாவளி காற்றில் இந்த வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது.

The post அம்மன் கோயிலில் சூறாவளி காற்றில் சாய்ந்த 150 ஆண்டுகால வேப்பமரம் அதே இடத்தில் நடப்பட்டது: பக்தர்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Amman temple ,Thiruvallur ,Kolam ,
× RELATED அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்